சென்னை: சிறுசேரி – கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில்  இயக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், அந்த  திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் 3-வது வழித்தடத்தில், சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதற்கு பதில் பேருந்துகளை இயக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

சிறுசேரி – கிளாம்பாக்கம் இடையே, கேளம்பாக்கம் வழியாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க, மெட்ரோ ரயில் சேவைக்கு பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அதற்கு பதிலாக, பேருந்துகளை இயக்க, மெட்ரோ ரயில் பரிந்துரைத்துள்ளது.

புதிய பேருந்து முனையத்தில் விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் இணைப்பு இருக்கும். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) கணிசமான தொழில்துறை மற்றும் குடியிருப்பு வளர்ச்சிகளைக் கொண்ட கேளம்பாக்கம் வழியாக மாமல்லபுரத்தை நோக்கி மெட்ரோ ரயில் விரிவாக்கப் பாதையின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளது.

மேலும்,  சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக திருப்போரூர் வரை மாற்று வழியில் நீட்டிப்பு செய்வது தொடர்பான யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  பூந்தமல்லியில் இருந்து புதிதாக வரவிருக்கும்  பரந்தூர் விமான நிலையம் வரையிலும்,   கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரையிலும்  மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவது தொடர்பான  திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில்  இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தினசரி 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக,  மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப் படுகின்றன. தற்போது, 45-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப்பாதை பணி, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி உட்பட பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

ரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 வழித் தடங்களையும் நீட்டிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி வரையிலான 3-வது வழித்தடத்தை கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை ( 26 கி.மீ. ) நீட்டிக்கவும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை ( 43 கி.மீ. ) நீட்டிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

அதுபோல,  மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித் தடத்தை கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை ( 16 கி.மீ. ) நீட்டிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த வழித்தடங்கள் நீட்டிப்பு தொடர்பாக சாத்தியகூறு அறிக்கை தயாரித்து வழங்க மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடப்பட்டது. அதன்படி,  திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,   4-வது வழித்தடத்தில் பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை நீட்டிப்பது, 5-வது வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்துஆவடி வரை நீட்டிக்கப்பட உள்ளது.

அதே நேரத்தில்,3-வது வழித்தடத்தில் சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

இருப்பினும், இந்த நீட்டிப்பு திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக திருப்போரூர் வரை நீட்டிப்பது, தேவைப்பட்டால் மகாபலிபுரம் வரை நீட்டிப்பு செய்வது தொடர்பாக பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையில், மற்ற இரண்டு வழித்தடங்களை நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, ஆலோசனை நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு மாதத்தில் ஆலோசனை நிறுவனங்கள் தேர்வு செய்து, அடுத்த ஆறு மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.