டிகர் சங்க தேர்தல் நெருங்க நெருங்க உக்கிரம் அதிகமானது போலவே, தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தல் நெருக்கத்தில் வர வர, அதிரடி அடாவடி பேச்சுக்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றன.

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஏப்ரல் 2-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் நடிகர் விஷால், “அம்மா” கிரியேஷன்ஸ் சிவா, ராதாகிருஷ்ணன், கேயார், கலைப்புலி சேகரன் ஆகியோர் தலைமையில் ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் விஷால் தலைமையிலான அணியினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் பிரகாஷ்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது தற்போதைய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பற்றி  கடுமையாக குறை கூறி பேசினர். இதில் ஆவேசமடைந்த தயாரிப்பாளர்கள் சிலர், கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் நடிகர் விஷாலை கண்டித்து  இன்று போராட்டம் நடத்தினர்.

அப்போது  விஷாலை,  போட்டுத்தாக்கிவிட்டார் தாணு:

“விஷால்… (மனசெல்லாம் அல்லது உடம்பெல்லாம்)  விஷத்தை வச்சுக்கிட்டு விஷால்னு பேரு வச்சிருக்கியே” என்று ரைமிங்காக தாளித்துவிட்டார்.

அது மட்டுமல்ல.. ஏதோ விஷால் எதிரே இருப்பது போல, “ஏம்பா விஷால்.. உனக்குத்தான் நாப்பது சொச்சம் வயசாச்சே… பேசாம கல்யாணம் கட்டிகிட்டு புள்ளகுட்டிய பெத்துகிட்டு சந்தோசமா இருக்கலாமில்ல..” என்றும் கலாய்த்தார்.

அதோடு, “நடிகர் சங்கத்தத்துல கட்டிடம் கட்டறதா சொல்லி இன்னைக்கு அதை சுடுகாடா ஆக்கிட்ட.. தயாரிப்பாளர் சங்கத்தையும் கெடுக்கணுமா” என்றார் ஆத்திரமாக.

நடிகர் பிரகாஷ்ராஜ் பற்றி கூறும்போது, ’கால்ஷீட் கொடுத்து ஒழுங்கா நடிக்க போங்க. கூட்டு குடும்பமாக நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். மொழி, இனம், மதம் வாரியாக பிரிவினையைத் தூண்டும் விதமாக உங்கள் பேச்சு அமையலாமா? நீங்கள் திருந்திக் கொள்ளவேண்டும், திருத்திக் கொள்ளுங்கள்’ என்று பொளந்து தள்ளிவிட்டார்.

ம்…  இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க எப்படியெல்லாம் பேசப்போகிறார்களோ..!