தனது படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் அளிக்காமல் இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்து தணிக்கை அலவலகம் முன் இன்று தயாரிப்பாளர் ஒருவர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலத்தைச் சேர்ந்தவர் கே.எம். ஆனந்தன். இவர் 2014ம் ஆண்டு மேச்சேரி வனபத்ரகாளி. என்ற படத்தைத துவங்கினார். நடிகை சீதா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில்தான் பட வேலைகள் முழுமையாக நிறைவடைந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி இணையதள சேவை வழியாக சென்சாருக்கு விண்ணப்பிக்கப்பட்டு அதே மாதம் 24 ஆம் தேதி தணிக்கை அதிகாரிகளால் பார்க்கப்பட்டுள்ளது.

ஆனால், “80 நாட்களாக சான்றிதழ் தாரமல் இழுத்தடிக்கிறார்கள்” என்று புகார் கூறி, இன்று தணிக்கை அலுவலகம் முன்பு ஆனந்தன் தர்ணா போராட்டம் நடத்தினார். செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: “ 24/08/2017 இல் என்னுடைய திரைப்படத்தை பார்த்துவிட்டு, தணிக்கை அதிகாரி மதியழகன், “ உங்களின் திரைப்படத்தில் ஒரே ஒரு கட் கூட கிடையாது, ரெண்டே ரெண்டு மியூட் மட்டும்தான். U சான்றிதழ் அளிக்கப்படும்” என்று ஏழு பேர் முன்னிலையில் தெரிவித்தார்…

அதன்பிறகு பத்து நாட்கள் கழித்து , “உங்கள் திரைப்படத்தில் நிறைய மாறுபட்ட கருத்துகள் வந்திருக்கின்றன. . நீங்க அப்புறம் வாங்க அப்புறம் வாங்க “ என்றார். அதற்கு நான், “ நீங்க U கொடுத்தாலும் சரி UA கொடுத்தாலும் சரி, எது உகந்ததோ அதைக்கொடுங்க சார்” என்றேன். “அப்படியென்றால் UA வாங்கிக்கறேன் என்று எழுதிக்கொடுங்க” என்றார்.

நானும் 21/09/2017 அன்றே எழுதிக்கொடுத்தேன். அதன் பிறகும் இன்றுவரை 80 நாட்களுக்கு மேலாகிறது, தினமும் வரும் போ, வரும் போ, வரும் போ, என்கிறார். ஆனால் சான்றிதழ் வந்தபாடில்லை. வேறமாதிரி, ஏதும் எதிர்பாக்கின்றார்களா என்று தெரியவில்லை.

ஆனால் ஏதும் தர என்னால் முடியாது. நான் வீடு , நிலம் எல்லாம் அடகு வைத்து பணம் புரட்டி இப்போது திண்டாடி நிற்கிறேன். உடல் நலம் வேற சரியில்லை என்று அழுது கூட கேட்டேன். ஆனா, என்னை மனிதனாகவே மதிக்கவில்லை. ஆகவேதான் இன்று தர்ணா போராட்டம் நடத்த தீர்மானித்தேன்” என்று தெரிவித்தார்.