சென்னை

சிறப்பாகப் பாடம் நடத்த்த்ம் ஆசிரியர்களுக்கு விருது, தலைமை ஆசிரியருக்குப் பரிசு என தமிழக பள்ளிக்கல்வித்துறை பல அறிவிப்புக்களை  வெளியிட்டுள்ளது.

File picture

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நேற்று காணொளிக் காட்சி மூலம் நடந்தது.  இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆணையர் நந்தகுமார் மற்றும்,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.  இந்த மாநாட்டில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அந்த முடிவுகள் குறித்த விவரம் வருமாறு :

  • அரசு பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். 2021-22ஆம் கல்வி ஆண்டில் 1ஆம் வகுப்பு முதல் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை EMIS- ல் பதிவேற்றம் செய்யவேண்டும்.
  • 2021-22ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அதில் உதவி பெறும் பள்ளிகளில் 1,00,000 பேர் சேர்ந்திருக்கிறார்கள்.
  • 1 கிலோ மீட்டர் தொலைவில் தொடக்கப் பள்ளிகளும், 3 கிலோ மீட்டர் தொலைவில் நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.
  • கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1125 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்து இருக்கிறார்கள். அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த வருடம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • கரூர் மாவட்டத்தில் உள்ள நரிக்கட்டி பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும் 450 மாணவர்களைச் சேர்த்துள்ளார். பெற்றோர்களை அணுகி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். அதுபோன்று மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்களை அணுகி மாணவர்களை ஊக்குவித்தும் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.
  • தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தமுடியாத சூழ்நிலையில் அவர்கள் அரசுப் பள்ளியை நாடுகிறார்கள். அவ்வாறு வரும் மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

 

  • புதிய 2021-22ஆம் கல்வி ஆண்டில் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்குக் கால அட்டவணை தயார் செய்து தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
  • கல்வித் தொலைக்காட்சியில் பாடத்திட்டங்கள் நடைபெறுகின்றன என்ற தகவல்களை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்கள் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.
  • அனைத்து மாவட்டப் பள்ளிகளிலும் ஹை-டெக் லேப் செயல்பாட்டில் இருக்க வேண்டும். இனி வருங்காலங்களில் PFMS மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பள்ளிக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படாத நிலையில் இருந்தால் விரைவில் கட்டிமுடிக்க வேண்டும்.
  • பள்ளிகளுக்குத் தேவையான கழிப்பறைகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும்.
  • பள்ளிக் கல்வி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் பட்டியலின மாணவர்களை அதிகம் சேர்த்த தலைமையாசிரியர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் பயனடையும் வகையில் பாடங்களை நடத்தி வருகிறது. அது மாணவர்களுக்கு முழுமையாகச் சென்றடைகிறதா என்று பார்க்க வேண்டும்.
  • தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களை வீட்டிற்குச் சென்று கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்கள் புரிகிறதா அவர்கள் ஆர்வமுடன் பார்க்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
  • கல்வித் தொலைக்காட்சியில் எடுக்கப்படும் பாடங்களுக்கு சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்தும், அவ்வாசிரியர்கள் நன்றாகப் பாடம் கற்பிக்கிறார்களா? அவர் கற்பிக்கும் பாடத்தை அவர் நன்கு புரிந்து பாடம் நடத்துகிறாரா என்றும் பார்க்கவேண்டும்.
  • கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படும்.
  • அரசின் அறிவிப்பின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.