காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்காவை நியமித்துள்ள ராகுல்காந்தி- உ.பி.மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 தொகுதிகளை வென்றெடுக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து விட்டார்.

பிரியங்காவின் பிரவேசம் –அங்குள்ள பா.ஜ.க.தலைவர்களின் தூக்கத்தை தொலைத்து விட்டது. இந்திரா பேத்தியின் வருகை இந்திராவின் இளைய மருமகள் மேனகாவையும் கலக்கம் அடைய செய்திருப்பது தான் வியப்பான விஷயம்.

மத்திய அமைச்சரான மேனகா- இப்போது பிலிபிட் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். மகன் வருண் காந்தி-சுல்தான்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

இந்த தொகுதி ராகுல்காந்தியின் அமேதி தொகுதியை அடுத்து உள்ளது.இன்னும் சில நாட்களில் அந்த ஏரியாவில் பிரியங்கா சூறாவளி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

அமேதியில் வீசும் பிரியங்கா அலை பக்கத்து தொகுதியான சுல்தான்பூரிலும் வீசும் பட்சத்தில்- வருண் கவிழ்ந்து விடலாம் என்று பயப்படுகிறார்- மேனகா.

எனவே தனது தொகுதியான பிலிபிட் தொகுதியில் வருணை நிறுத்த கட்சி மேலிடத்தில் அனுமதி கேட்டுள்ளார்.அமீத்ஷா அனுமதி அளிப்பார் என்றே தெரிகிறது.

பிலிபிட்டை மகனுக்கு கொடுக்கும் மேனகா இந்த முறை-ஹரியானா மாநிலம் கர்னல் தொகுதி யில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இதனிடையே –நடிகை ஹேமமாலினியை வேறு தொகுதியில் போட்டியிடுமாறு- கட்சி மேலிடம் சொல்ல அவர் மறுத்து விட்டார்.

ஹேமா – இப்போது உ.பி.மாநிலம் மதுரா தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். அவரை பதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிடுமாறு அமீத்ஷா கேட்டுக்கொண்டார்.

சிக்ரி தொகுதி பா.ஜ.க.எம்.பி.சவுத்ரி –தொகுதியில் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருப்பதால் அவர்  மீண்டும் அங்கு வெற்றி பெற முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே சிக்ரியில் ஹேமமாலினியை நிறுத்த பா.ஜ.க.திட்டமிட்டது. ஆனால் –மதுரா தொகுதியில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார்- ஹேமா.

‘’மதுராவில் வீடலெல்லாம் வாங்கி விட்டேன். போட்டியிட்டால் அங்கு தான் போட்டியிடுவேன்’’ என கறாராக சொல்லி விட்டார்- இந்தி சினிமாவின் நேற்றைய கனவு கன்னி.

–பாப்பாங்குளம் பாரதி