சென்னை; குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

முதல் முறையாக கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12ந்தேதி திறக்கப்படும் நிலையில், இந்த முறை அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரித்து உள்ளதால், வழக்கத்தை விட முன்கூட்டியே அணை திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை வினாடிக்கு 29,964 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று (சனிக்கிழமை) காலை வினாடிக்கு 46,353 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் நேற்று (வெள்ளிக்கிழமை)  காலை 12.77 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று சனிக்கிழமை காலை 115.35 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதிக்குப் பதில் முன்கூட்டியே மே 24-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் மேட்டு அணையிலிருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜூன் 12 ஆம் நாளன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டு, குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டுர் அணைக்கு அதிக நிர்வரத்து உள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 115.35 அடியாகவும் நீர் இருப்பு 86:25 டிாம்சி அடியாகவும் உள்ளது.

அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அனையிலிருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12க்கு முன்பாகவே, வரும் 24 முதல் நீரைத் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நமது நாடு சுதந்திரம் அடைந்தது முதல், குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்படும் நாளாகிய ஜூன் 12-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீர் திறந்து விடப்படுவது இது 2வது முறையாகும்.

இது மட்டுமன்றி மே மாதத்தில் இவ்வாறு மிக முன்னதாக பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால் திருச்சி தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், அரியலூர், பொம்பலூர் புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். மேலும் நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டபிடப்பட்டு, 23.4.2022 முதல் துவங்கப்பட்டு ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

ஆறுகளில் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் வரும் 31க்குள் முடிவடையும். இதனால், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது. முழுமையாக டெல்டா பகுதியின் கடைமடை வரை அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அடைய எதுவாகும்.

இவ்வாறு மிக முன்னதாக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்படுவதால் காவிரி டெல்டா விவசாயிகள் அதிக பரப்பளவில் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவும், சம்பா பயிருக்கான பணிகளை முன்னதாகவே தொடங்கி செயல்படுத்தவும் இயலும். வெள்ளக்காலங்களில் சம்பா பயிர்கள் நீரிம் மூழ்காது காக்கவும் இந்த நடவடிக்கை உதவும். இது மட்டுமன்றி தொடர்ந்து நீண்டகாலத்திற்கு நீர் கிடைக்கப் பெறுவதால் டெல்டா பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உயர்வதற்கும் இது வழிவருக்கும். விவசாய இடுபொருட்களும் வேளாண் கடன்களும் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நீரை முறையாகப் பயன்படுத்தி அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி செய்து இந்த ஆண்டும் நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைத்து வளம் பெருகிட வேண்டும் என்று டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.