சென்னை:
பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையை அழகுபடுத்துவதற்காக மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலையின் மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாகச் சென்னையில் உள்ள அரசு கட்டிடங்கள், பேருந்து நிலையங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றுவது என மாநகராட்சி முடிவு செய்து கடந்த ஜூலை 8ம் தேதி அதற்கானப் பணிகளை துவக்கியது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாளில் மட்டும் சென்னையின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுமார் 12 ஆயிரம் சுவரொட்டிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். அதேபோல் சுவரொட்டிகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில், 1913 என்ற எண்ணையும் மாநகராட்சி அறிமுகம் செய்து இந்த எண்ணில் அழைத்து புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுவரொட்டிகளை அகற்றப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.