பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்யும் முடிவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டம் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை தாக்கல் செய்வது மற்றும் தீர்ப்பில் வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை நிராகரிப்பது என்கிற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் முடிவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டம் வரவேற்கிறது.

இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் இடத்தில் கோயிலை கட்டுவதற்கு வழிகாட்டும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக நீதி பரிகாசம், முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சம் மற்றும் அரசியல் சாசன கொள்கைகள் மீதான தாக்குதலாகும். உச்சநீதிமன்றத்தில் இருந்து இத்தகைய ஓர் உத்தரவை மனசாட்சியுள்ள எந்த குடிமகனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மன்னுவை தாக்கல் செய்ய முடிவு செய்தது மற்றும் 5 ஏக்கர் நிலத்தை நிராகரித்ததன் மூலம் முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்திய முஸ்லிம்களின் உணர்வுகளை மட்டுமன்றி, இந்திய சமூகத்தின் உணர்வுகளையும் வெளிப்படுத்தி தேசத்திற்கு ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்றியுள்ளது. நீதிக்கான சிந்தனைகளை உயர்த்திப் பிடிக்கும் முடிவை எடுத்ததற்காக அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் காரியக் கமிட்டி உறுப்பினர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், இந்திய முஸ்லிம்களின் உயர்மட்ட பிரதிநித்துவ அமைப்பாகும். ஏனைய தனிநபர்கள் அல்லது குழுக்கின் கருத்துக்களை விட, அதன் முடிவுகளுக்கு அதிக மதிப்பு இருக்கிறது. மௌலானா ரபி ந்தஃவி, மௌலானா வலி ரஹ்மானி, வழக்கறிஞர் ஜஃபர்பாய் ஜீலானி, மௌலானா மஹ்மூத் மதனி, மௌலானா அர்ஷத் மதனி, அசாதுதீன் உவைஸி எம்.பி என தற்போதைய அதன் கூட்டத்தில் கலந்துக்கொண்டர்களில் பட்டியல் இந்த உண்மையை விளக்குவதற்கு போதுமானதாகும். முஸ்லிம் தனியார் சட்ட வாரிய கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயலாளர் அப்துல் வாஹித் சேட்-யும் கலந்துக்கொண்டார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரங்களை விவாதிக்க தேசிய செயற்குழு கூட்டம், தனது சுய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஒரு நெரிய முடிவிற்கு உச்சநீதிமன்றம் வரத் தவறியதை விசித்திரமாக காண்கிறது.

இந்த அடிப்படையற்ற தீர்ப்பின் மூலம் இந்திய நீதித்துறையின் புகழ் மற்றும் நம்பகத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தவறிழைக்காத எந்தத் துறையும் இல்லை. இந்திய உச்சநீதிமன்றத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் பொறுப்பு அதன் மீது உள்ளது. உச்சநீதிமன்றம் ஒரு அரசியல் தீர்ப்பை வழங்கியுள்ளது என்றும், இது வெளிப்படையான நீதி மறுப்பாகும் என்ற தனது பார்வையை பாப்புரல் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது. நீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்குமாறும் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் நினைவுகளை ஜனநாயக மற்றும் அமைதியான நிகழ்ச்சிகள் மூலம் உயிரோட்டமாக வைப்பதற்கு இக்கூட்டம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. பாபரி மஸ்ஜித்திற்கான நீதியை மீட்டெடுப்பதற்கான போராட்டங்களில் முன்னணியில் நிற்கும் என்ற தனது உறுதிமொழியை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு புதுப்பித்துள்ளது.

இதில் OMA ஸலாம், M.முஹம்மது அலி ஜின்னா, அனிஸ் அகமது, பேரா.P.கோயா, E.M அப்துல் ரஹ்மான், K.M ஷரிஃப், A.S இஸ்மாயில், நஸ்ருதீன் இளமரம், M.முஹம்மது இஸ்மாயில், முஹம்மது ஷாகிப், அப்ஸர் பாஷா, கரமண அஷ்ரப் மௌலவி, K. சாதாத், வழக்கறிஞர் முஹம்மது யூசுப், யா முகைதீன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.