டெல்லி:

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக எம்.பி. கதிர்ஆனந்த் பதவியேற்றார்.  அவருடன் மேலும் 3 பேர் இன்று லோக்சபா உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், இன்று தொடங்கி உள்ள நிலையில்,  வரும் டிசம்பர் 13-ஆம் தேதி வரை 20 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இன்று பாராளுமன்ற சபை தொடங்கியதும்,  மறைந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் அருண் ஜெட்லி, ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ் குப்தா உள்பட 10 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதுபோல மாநிலங்களவையில் பணியாற்றியஅருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ராம்ஜெத்மலானி, குருதாஸ் தாஸ்குப்தா உள்பட  5 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், பீகார் மாநிலம் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிரின்ஸ் ராஜ், மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹிமாத்ரி சிங்,  மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஸ்ரீனிவாஸ் தாதாசாகேப் பாட்டீல் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். கதிர்ஆனந்த் தமிழில் உறுதிமொழி எடுத்து பதவியேற்றுக் கொண்டார்.

இதையடுத்து, திமுகவின்  நாடாளுமன்ற உறுப்பினர்களின்  எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.