சென்னை: உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்து உள்ளார். அதன்படி, இன்று மாலை 3.30 மணிக்கு பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் தண்டனை  விதித்தால்,  பொன்முடி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவர் சார்பில்  மேல் முறையீடு செய்யப்பட்ட  வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து, பொன்முடி மீதான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.  இதன் காரணமாக மீண்டும் எம்எல்ஏ பதவியை பொன்முடி பெற்றார்.

இதனையடுத்து பொன்முடிக்கு அமைச்சருக்கான பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர் ரவி, தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, முழுமையான தீர்ப்பு வழங்கப்பட வில்லை என்றும், அதனால்  அரசியல் சாசனம் படி பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என தெரிவித்தார்.

இதனையடுத்து  திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழ்க்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு,   பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் நாளைக்குள் (இன்றுக்குள்) தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் இல்லை என்றால் நாங்களே எங்கள் முடிவை அறிவிப்போம் என அதிரடியாக தெரிவித்திருந்தது.

இதனையடுத்து ஆளுநர் ரவி நேற்று இரவு  சட்டவல்லுநர்களோடு ஆலோசனை செய்தார். . இதனையடுத்து வழக்கு விசாரணை இன்னும்  மீண்டும் தொடங்க உள்ளதால்,   பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் உள்ள ராஜ்பவனில் பிற்பகல் 3.30 மணிக்கு பதவி பிரமாணம் நடைபெறுகிறது