டில்லி,
பிரதமர் மோடியுடன் பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென  சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஏற்கனவே ரிசர்வ் வங்கி கவர்னர் விவகாரம், அருண் ஜேட்லி விவகாரம் போன்றவற்றிலும், தமிழக முதல்வர் குறித்தும், அரசு குறித்தும் சர்ச்சைக்குறிய கருத்துக்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் சுவாமி.
மேலும் மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்த பழைய ரூ.500,ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்தும் மத்திய அரசை விமர்சனம் செய்திருந்தார் சுவாமி.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, தமிழக அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று டுவிட் செய்து சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
ஆனால், தற்போது தமிழகத்தில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து ரெய்டு நடத்தி வரும் வேளையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதாக டெல்லி அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, சுவாமி சந்தித்துப் பேசியுள்ள நிகழ்வு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.தற்போது நீதித்துறைக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள  நீதிபதிகள் நியமனங்கள் குறித்த மோதல் போக்கு குறித்து விவாதித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்தபடியாக ஜெகதீஷ் சிங் கேஹர் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இதுகுறித்து, சுப்பிரமணியன் சுவாமியை அழைத்து மோடி விவாதித்துள்ளார் என்றும், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ரெய்டு மற்றும் அரசியல் நிலவரம் குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தலைமை செயலாளர் வீட்டில் ரெய்டு நடைபெற்றுக்கொண்டிருந்த புதன்கிழமை மாலை வேளையில் டெல்லியில் இந்த சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.