டில்லி,
நாம் உபயோகப்படுத்தும் வண்டிகள் நிறுத்துவதற்கு போதுமான வசதி இருந்தால்தான் இனிமேல் வாகனங்கள் பதிவு செய்யப்படும் என மத்திய அரசு அறிவிக்க இருக்கறிது.
நம் நாட்டில் பெரும்பாலானவர்கள் தாம் வைத்திருக்கும் வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி விடுவார்கள். இதன் காரணமாக போக்குவரத்து பிரச்சினைகள் அடிக்கடி எழுவதுண்டு. வீடுகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான இடவசதி இருப்பதில்லை.
இதை தடுக்கும் வகையில், சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்கும்பொருட்டும் புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
பொது இடங்களில், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில், புதிதாக வாகன பதிவு செய்யும் போது, வாகன நிறுத்துமிடம் இருப்பதற்கான சான்றிதழ் தருவது, விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு,
பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, கழிப்பறைகளை அதிகம் கட்ட, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கழிப்பறைக்கு இடம் ஒதுக்கப்படாமல், எந்த ஒரு கட்டுமானத்திற்கும் இனிமேல் அனுமதி பெற முடியாது. இது, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது; விரைவில் அமலுக்கு வரும்.
அதுபோலவே, சாலைகள் மற்றும் தெருக்களில் வாகனங்களை நிறுத்துவதால், பெருமளவு இட நெருக்கடி ஏற்படுகிறது. வாகனத்தை நிறுத்துவதற்கான இடம் இருந்து, அதற்கான சான்றிதழ் பெற்றால் மட்டுமே, புதிய வாகனங்களை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்படும்;
இந்த திட்டம் குறித்து, சாலை போக்குவரத்து அமைச்சகத்துடன் பேசி வருகிறோம்.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.