சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் அரசியல், மத, கலாசார பொழுதுபோக்கு கூட்டங்கள் நடத்தலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது தேர்தல் பிசாரத்தை தொடங்குகிறார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, பொதுக்கூட்டங்கள், மத நிகழ்வுகள் நடத்த மத்திய, மாநிலஅரசுகள் தடை விதித்தன. பின்னர், வழங்கப்பட்டு வந்த தளர்வுகள் காரணமாக, போக்குவரத்து உள்பட பல்வேறு நிகழ்வுகள் தொடங்கி மக்களின் இயல்புநிலை திரும்பியது. ஆனால், பொதுமக்கள் அதிகம் கூடும் அளவிலான நிகழ்ச்சிகள், சுற்றுலாதலங்களுக்கு கடந்த 9 மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால், தமிழகஅரசு நவம்பர் 30ந்தேதி வெளியிட்ட தளர்வுகளின்படி, சுற்றுலா மையங்கள் உள்பட பொதுமக்கள் பொழுதுபோக்கு இடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி மெரினா உள்பட பொழுதுபோக்கு இடங்கள் திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து கடந்த வாரம் மேலும் தளர்வுகளை அறிவித்த  தமிழக முதல்வர் முதல்வர் பழனிசாமி ,   டிச.19 முதல் தமிழகத்தில் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்தலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி,  இன்று முதல்  திறந்தவெளியில் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, மதம்சார்ந்த கூட்டங்களை நடத்தலாம். ஆனால்,  அரசு அறிவிப்பின்படி, தனிமனித இடைவெளியை பின்பற்றி 50% பங்கேற்பாளர்களுடன் கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம். முன்னதாக,  மாவட்ட ஆட்சியர்களிடமும், சென்னையில் மாநகர காவல் ஆணையரிடமும் அனுமதி பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.