சென்னை: பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்கள், நோட்டுகளில் முதல்-அமைச்சரின் படத்தை அச்சிட்டு பொது மக்களின் பணத்தை வீணாக்க கூடாது என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை பாராட்டியுள்ளது.

நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன், பள்ளி மாணாக்கர்களுக்கு தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், அரசிடம்  இருப்பில் உள்ள பாடப் புத்தகங்கள் நோட்டுகள், பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களுடைய வரிப் பணத்தை வீணாக்க கூடாது. எனவே, ஏற்கனவே பிரிண்ட் செய்யப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், பைகளை வீணாக்கக்கூடாது அவற்றை மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்க உத்தரவிட வேண்டும். எதிர்காலத்தில் இது போல பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சி தலைவர்களை படங்களை பிரிண்ட் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான  அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம், முந்தைய முதல்வர்கள் படங்கள் அச்சடிக்கப்பட்ட சுமார் 65 லட்சம் புத்தகங்கள், நோட்டுகளை வீணாக்காமல் அச்சடிக்கப்பட்ட அதே நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு அந்த புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள், தமிழக முதல்அமைச்சருக்கு பாராட்டுதல்களை தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் பிறப்பித்த உத்தரவில்,  “பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள் அடங்கிய பைகளில் முதல்-அமைச்சர், அமைச்சர் ஆகியோரது படங்கள் அச்சடிப்பது மக்களின் வரி பணத்தை வீணடிப்பதாகும். அரசியல்வாதிகள் தங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்காக இது போன்று மக்கள் பணத்தை செலவு செய்யக்கூடாது. எதிர்காலத்தில் இதை அரசு உறுதி செய்ய வேண்டும். தற்போதுள்ள அரசும், புத்தக பை, நோட்டுகளில்  முதல்-அமைச்சரின் புகைப்படம் அச்சிடப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும். பொது நிதி இதுபோன்ற விளம்பரங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. இதை தற்போதைய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.