மதுரை:

விருதுநகரில்  நடைபெற்ற  திருமண விழாவில் கலந்துகொண்ட மு.க. அழகிரி, அரசியல் ஒரு சாக்கடை அதில் யார் வந்ததால் என்ன என்று அதிரடியாக கூறினார்.

திமுகவில் அதிரடி அரசியலை மேற்கொண்டு வந்தவர் திமுக தலைவர் மு.கருணாநிதியின்  மகன் மு.க. அழகிரி.  இவருக்கும், ஸ்டாலினுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சில ஆண்டு களாக அமைதியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், விருதுநகரில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது,  தான் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்ததாக கூறி, கேள்விகளை தவிர்க்க முயன்றார். ஆனால், செய்தியாளர்கள் அவரை விடாமல் துரத்தி காரில் ஏறச்சென்றபோது,  மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலி அரசியலுக்கு வருவதாக கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் தெரிவித்த  அழகிரி, “அரசியல் ஒரு சாக்கடை.. இதில் யார் வந்தால் என்ன” என காட்டமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் அறிவிப்புக்கு மூத்த தலைவர்களிடையே முனுமுனுப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அழகிரியும் கடுப்புடன் கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.