சென்னை

காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தி மற்றும் பாஜக பிரமுகர் ராஜேந்திரன் ஆகியோர் 13 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்து விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணின் மகளான 13 வயது சிறுமி வியாசர்பாடியில் உள்ள தனது ஒன்று விட்ட சகோதரியான ஷகிதா பானு என்பவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.   அங்கு அவரை ஷகிதா பானுவின் கணவர் மதன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு சிறுமியை விபசார தரகர் சந்தியா என்பவரிடம் அனுப்பப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

2 மாதங்களாக மகளை  காணாத சிறுமியின் தாய் ஷகிதா பானுவிடம் தனது மகளைக் காண வேண்டும் எனக் கூறி உள்ளார். அதையொட்டி ஷகிதா பானுவின் கணவர் அந்த பெண்ணை சந்தியாவிடம் இருந்து அழைத்து வந்து தாயாரிடம் ஒப்படைத்துள்ளார்.   சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.  அதிர்ச்சி அடைந்த தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதையொட்டி சென்னை வியாசர்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் சந்தியா, ஷகிதா பானு, மதன் மற்றும் மதனின் தாயார் செல்வி ஆகியோரை கைது செய்து அந்த பெண்ணை மீட்டுள்ளனர்.  விசாரணை செய்துள்ளனர்.  விசாரணையின் போது சந்தியா இந்த சிறுமியை எண்ணூர் காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தியிடம் அனுப்பி வைத்ததைத் தெரிவித்துள்ளார்.

ஆய்வாளர் புகழேந்தியிடம் நடந்த விசாரணையில் அவர் தாமும் தனது நண்பரும் பாஜக பிரமுகருமான ராஜேந்திரன் என்பவரும் அந்த சிறுமியைப் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.  இந்த நிகழ்வு ராஜேந்திரனின் அலுவலகத்தில் நடந்துள்ளது.   இவர்கள் இருவரையும் அடையாளம் காட்டிய அந்த சிறுமிக்குப் புகழேந்தி காவல்துறையைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.  இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணையை நடத்தி வரும் காவல் அதிகாரி, “இந்த சிறுமி தினமும் சுமார் 8 முறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.   சிறுமியைப் பலாத்காரம் செய்தவர்களில் ஒருவரான ஆய்வாளரை கைது செய்வதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லாமல் இருந்தது.  இதன் மூலம் காவல்துறை என்றுமே நீதிக்கு துணை போகும் என்பதைத் தெரிவித்துள்ளோம்.” எனக் கூறி உள்ளார்.