கோவை:  காவல்துறையினர் குறித்து அவதூறாக பேசிய பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பேட்டியை வெளியிட்ட,  ‘ரெட் ஃபிக்ஸ்’ யுடியூப் சேனல் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில், போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதுாறான கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தேனியில் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்தனர்.

மேலும் அவர்மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்து, ஜாமினில் வெளிவர முடியாதபடி பல்வேறு பிரிவுகளில் குற்றம் சாட்டியுள்னர்.

இந்த நிலையில், தேனியில் நள்ளிரவு கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை, இரவோடு இரவாக கோவை அழைத்து வந்த காவல்துறையினர், இடையில் வாகன விபத்தில் சிக்கினர். இதையடுத்து முதலுதவி மேற்கொண்ட நிலையில்,  அவரை கோவை அழைத்து வந்து போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து பல மணி நேரம் விசாரித்து, இரவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதியின் வீட்டில், சுமார், 2:00 மணி நேரம் நடைபெற்ற வாதத்தின் முடிவில் நீதிபதி கோபாலகிருஷ்ணன், வருகிற, 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, போலீசார் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில், நள்ளிரவு 1:00 மணி அளவில் அடைத்தனர்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட ரெட்பிக்ஸ் யுடியூப் சேனல் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதாவது, சவுக்கு சங்கர் ஆவேசமாக பேசிய வார்த்தைக்கொண்டு,    ‘சவுக்கு ஆவேசம், போலீசா… பொறுக்கீங்களா… இப்படியும் செய்யுமா காவல்துறை’ என்று பதிவிட்டு, சவுக்கு சங்கரின் பெண் போலீசார் குறித்து அவதுாறு வீடியோவை வெளியிட்ட யுடியூப் சேனல் ‘ரெட்பிக்ஸ்’ மீதும் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர். ரெட் ஃபிக்ஸ் சேனலை 2வது குற்றவாளியாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.