“புதிய இந்தியா” பற்றி பிரபல திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான பழனி பாரதி, முகநூலில் எழுதியிருக்கும் கவிதை வைரலாகி வருகிறது.

படித்துப்பாருங்கள்..

“விவசாயிகளுக்கு

வாய்க்கரிசி போடுவதுதான்

புதிய இந்தியா

 

நெசவாளர்களுக்கு

சவத்துணி நெய்வதுதான்

புதிய இந்தியா

 

சில்லறை வணிகர்களுக்கு

நெற்றிக்காசு வைப்பதுதான்

புதிய இந்தியா

 

மாட்டுக்கறி உண்பவரை

கொன்று

கொன்று

மனிதக்கறி உண்பதுதான்

புதிய இந்தியா

 

இல்லாதவனின்

கோவணத்தை பிடுங்கி

இருக்கிறவனுக்கு

கம்பளம் விரிப்பதுதான்

புதிய இந்தியா

 

மருத்துவ மனைகளில்

மழலைகளின் மூச்சறுத்து

வீடுகளில்

‘கிருஷ்ண பாதம்’ வரைவதுதான்

புதிய இந்தியா

 

மாநில கல்வி உரிமை பறித்து

சமூகநீதி புத்தகம் கிழித்து

உலக மூலதனத்துக்கு

விசிறி விடுவதுதான்

புதிய இந்தியா

 

பெண்களின் தீட்டுத்துணிக்கும்

வரி விதித்து

பத்து லட்சம் ரூபாய் ‘கோட்டு’ அணிந்து

சுதந்திரக்கொடி ஏற்றுவதுதான்

புதிய இந்தியா

செத்துச் செத்துப் பிறக்கிறது

புதிய இந்தியா

பிறந்து பிறந்து சாகிறது

புதிய இந்தியா!”