காந்திநகர்,

நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்புவர்கள்  நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அதன் வாயிலாகவே மருத்துவம் படிக்க சேர்க்கப்படுவர் என்று மத்திய அரசும், உச்சநீதி மன்றமும் அமல்படுத்தி உள்ளது.

ஆனால், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று கூறி வந்தார். ஆனால், தற்போது பிரதமராக வந்ததும் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து இரட்டை வேடம் போடுகிறார்.

இந்த ஆண்டு நீட் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகம் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. 1176 மதிப்பெண் எடுத்த மாணவி அனிதா, மருத்துவம் படிக்க இடம் கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்துகொண்டார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த நேரத்தில், தற்போதைய பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, தங்களது மாநிலத்தில் நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த 2012-2013ம் ஆண்டு முதல் நாடு முழுவதும நீட் நுழைவு தேர்வை கொண்டுவர அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. அதுகுறித்து மத்திய எம்சிஐ மூலம் அனைத்து மாநிலங்களுக்கு  சுற்றறிக்கையும்  அனுப்பப்பட்டது.

அப்போது குஜராத் மாநிலத்தில் மோடி தலைமையிலான ஆட்சிதான் நடைபெற்று வந்தது. அப்போது, குஜராத் அரசு  மத்திய அரசின் நீட் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போதைய குஜராத் மாநில அமைச்சர் ஜெய்நாராயணன் வியாஸ் எம்.பி.பிஎஸ் படிப்புகளில் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவு நுழைவு தேர்வு (NEET) ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார்.

NEET ஐ ஏற்றுக்கொள்ள  முடியாது என எங்களது மாநில அமைச்சரவை  முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் நாங்கள் தெரிவித்தோம் ‘ என்றும்,  மருத்துவக் கல்வியில் தேர்ச்சி பெற விரும்பும் குஜராத் மாணவர்களிடையே ,இதுபோன்ற நீட் தேர்வு அறிவிப்பு எந்தவொரு  பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது  என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கூறினார்.

இவ்வாறு கடுமையாக அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான நீட்டுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த மோடியும், அவரது தலைமையிலான அமைச்சரவையும் தற்போது நீட் தேர்வை, மாநில அரசு மற்றும்  மக்களின் விருப்பதை மீறி அமல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் மோடியின் மற்றொரு முகம்  மீண்டும் தெளிவாக தெரிய வந்துள்ளது.