சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக போட்டியிடும் 23 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டம்  கீழ்வேளூர் தொகுதிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றி புதிய வேட்பாளரை கட்சி தலைமை அறிவித்து உள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமை கட்சியான  பாமகவுக்கு 23 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டது. இதுதொடர்பாக   அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, பாமக சார்பாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அதன்படி, அதிமுக கூட்டணியில், செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேளூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. அதைத் தொடர்ந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கீழ்வேலூர் (தனி) தொகுதி வேட்பாளரை மாற்றி கட்சித்தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, ஏற்கனவே கீழ்வேளூர் (தனி) தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேத.முகுந்தன்  மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய வேட்பாளராக வடிவேல் இராவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார்.