கொரோனா தொற்றுக்கு மஞ்சள் மட்டுமே மிகச்சிறந்த மருந்து என்று நான் கூறியபோது காங்கிரஸ் கட்சி என்னை கேலி செய்யவில்லை மாறாக மஞ்சள் விவசாயிகளை கேலி செய்தது என்று பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலை அடுத்து அம்மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பிரதமர் மோடி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மைசூரு மாவட்டம் நஞ்சன்குட் பகுதியில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் அங்குள்ள மஞ்சள் விவசாயிகளிடையே பேசினார்.

அப்போது “கொரோனா தொற்றுக்கு மஞ்சள் மட்டுமே மிகச்சிறந்த மருந்து என்று நான் கூறியபோது காங்கிரஸ் கட்சி என்னை கேலி செய்யவில்லை மாறாக மஞ்சள் விவசாயிகளை கேலி செய்தது” என்று பேசியுள்ளார்.

பிரதமரின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதுடன் 2019 தேர்தலில் மஞ்சள் விவசாயிகள் நலனுக்காக வாரியம் அமைக்கப்படும் என்று பாஜக அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தவிர, புகழ்பெற்ற மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றதன் மூலம் அதன் புகழுக்கு களங்கம் விளைவித்தவர்கள் தற்போது மஞ்சள் விவசாயிகள் குறித்து பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது என்று விமர்சித்து வருகின்றனர்.