டில்லி:

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில்  உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று முன்தினம் மாலை ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வாகனங்களின் மீது,  அங்கு பதுங்கியிருந்த தற்கொலை படை பயங்கரவாதி குண்டு நிரப்பிய காருடன் மோதி வெடிக்கச் செய்ததில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும்,  20 வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தியா விலும் அனைத்து அரசியல் கட்சிகளும் வேறுபாடு களைந்து ஒற்றுமையாக பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்று குரல்கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில், குண்டுவெடிப்பில் இறந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடல்கள் டில்லி  பாலம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்களுக்கு காங். தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முப்படை தலைவர்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, வீரர்களின் சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தூத்துக்குடி வீரர் சுப்பிரமணியத்தின் உடல், முழு அரசு மரியாதையுடன் இன்று  மதியம் 12 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், புல்வாமா தாக்குதல் தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக அரங்கில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/pulwama-attack-prime-minister-narendra-modi-paid-tribute-mortal-remains-of-the-crpf-jawans-341442.html?ref=60sec