சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்  9ந்தேதி வழங்கப்படும்  என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில்,  பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.  இந்த தேர்வு முடிவுகளை  இன்று காலைதேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்.  அதைத்தொடர்ந்து இணையதளங்களிலும், ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்களுக்கு மொபைலிலும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த முறை திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்த நிலையில், விருதுநகர் மாவட்டம் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்கள் தேர்ச்சியில் பின்தங்கி உள்ளன.

இந்த நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க ஏதுவாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதனப்டி,  12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ம் தேதி வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.   மாணவர்கள் தாங்கள் படித்த அந்தந்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு மதிப்பெண் தொடர்பான,  மறுமதிப்பீடு, மறு கூட்டல் நாளை முதல் தொடங்குவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் தோல்வி அடைந்தவர்கள், தேர்வு எழுதாதவர்கள் மீண்டும் தேர்வு எழுதும் வகையில், உடனடி தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.