சென்னை,

ங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்வதற்கான  தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

வக்கீல் யானை ராஜேந்திரன், விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தவிர்க்க தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக பதிவு செய்யக் கூடாது என தடை விதித்தது. மேலும்  இதுகுறித்து அரசு புதிய சட்டம் இயற்றவும் ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.

இதன் காரணமாக அவசர தேவைக்கு நிலங்களை விற்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, அகில இந்திய மனை மேம்பாட்டாளர்கள், முகவர்கள் கூட்டமைப்பு, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத் தரகர்கள் நலச் சங்கம் உள்ளிட்டவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால் உச்சநீதி மன்றமும், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில், அவகாசம் கோரியதால், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும், அடுத்த விசாரணை பிப்ரவரி 27ந்தேதி நடைபெறும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறினர்.