ராமேஸ்வரம்,

லங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

இலங்கை கடற்படையால் கடந்த 6-ம் தேதி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, பிரிட்ஜோவின் பெற்றோர், மீனவ கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள், 6 நாட்களுக்கும் மேலாக, தங்கச்சிமடம் குழந்தை ஏசு ஆலயம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கடலோர மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர், நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சாலைமறியலாக நீடித்த பேராட்டம், காவல்துறையினர் பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது.

இதையடுத்து  மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை யடுத்து, பிரிட்ஜோவின் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்களும், போராட்டக்காரர்களும் ஒப்புக்கொண்டனர்.

அதன்படி, ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மீனவர் பிரிட்ஜோவின் உடலை அவரது சித்தப்பா மற்றும் உறவினர்களிடம் பிற்பகல் 3 மணியளவில் ஒப்படைக்கப் பட்டது.

அதையடுத்து அவரது உடல் அங்கிருந்து 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள தங்கச்சி மடத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு,  குழந்தை ஏசு ஆலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதையடுத்து திருப்பலி நடத்தப்பட்டு, அவர் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு தங்கச்சிமடம் புனித சூசையப்பர் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

பிரிட்ஜோவின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அதையடுத்து மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரும் 20ம் தேதி டில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.