டெல்லி:

பெட்ரோல் மற்றும் டீசல் விபற்னையாளர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்ததி வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மே 10ம் தேதி முதல் ஞாயிறுதோறும் வார விடுமுறை விட பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது வரை பெட்ரோல் பங்குகளுக்கு வார விடுமுறை கிடையாது. மேலும், 10ம் தேதி அன்று எரிபொருள் கொள்முதல் செய்யாமல் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இதன் தாக்கம் மே 14ம் தேதி வாடிக்கையாளர்களை பாதிக்கும்.

முன்னதாக கடந்த ஜனவரியில் கமிஷன் உயர்த்தப்படும் என்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால், தற்போது வரை இதற்கான அறிகுறி தெரியாததால் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீலர் சங்க தலைவர் ரவி சிண்டே கூறுகையில்,“ கடந்த 2015ம் ஆண்டு உர்ஜா சங்கம் விழாவில் பேசிய மோடி எரிபொருள் துறையில் தற்போது 77 சதவீதம் காஸ்ல பெட்ரோலிய பொருட்கள், எண்ணெய் ஆகிய வடிவங்களில் இறக்குமதி செய்யப்படுகிறது.

2022ம் ஆண்டில் இதில் 10 சதவீதம் குறைக்கப்படும். இந்த 10 சதவீதத்தை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். இதுநமது கனவாக இருக்கும் என்று பேசினார். நாங்கள் பிரதமரின் செய்தியை பின்பற்றவுள்ளோம். மே 14ம் தேதி முதல் ஞாயிற்று கிழமை தோறும் பெட்ரோல் பங்குகளை மூட முடிவு செய்துள்ளோம் என்றார்.

பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 2.56ம், டீசலுக்கு ரூ. 1.65ம் கமிஷன் வழங்கப்படுகிறது. இதை முறையே ரூ. 3.33 என்றும், ரூ. 2.13 என்றும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று டீலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். டீலர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 12 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதை 170 கிலோ லிட்டருக்கு ரூ. 30 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். இது தொடர்பாக அபூர்வ சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க எண்ணை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் ஏற்க மறுக்கின்றன” என்றார் சிண்டே.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கும் நடைமுறையை மாற்றி, தினமும் நிர்ணயம் செய்யும் வகையில் அமல்படுத்த போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சில பைசாக்கள் தினமும் மிச்சமாகும். இந்திய எரிபொருள் சில்லரை விற்பனையில் சர்வதேச தரத்தை ஏற்படுத்தும் வகையில் தின விலை நிர்ணயம் திட்டம் உதவியாக இருக்கும்.

தற்போது அரசு பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனங்கள் 95 சதவீத சில்லரை விற்பனையை தன்னகத்தே கொண்டுள்ளன. தினமும் விலையை நிர்ணயம் செய்வதால் நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.