நெல்லை: ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர்,  புட்டப் கேஸ் செட்டப் கேஸ் போட தீவிரமாக இருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவியை   சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்தார்.

நெல்லையில்  செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவிடம் ஆளுநர் மாளிகை மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்தவர்,   “தமிழ்நாட்டில் 12 ஆண்டுகளில் 9 பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. 9 சம்பவங்களையும் நிகழ்த்தியது பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியைச் சார்ந்தவர்கள்தான்.  தங்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு குண்டு வீச்சு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர்.

ஆளுநர் மாளிகை அருகே 10வதாக சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிகளும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது கிடையாது. ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசிய சம்பவத்தில் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தார்கள் என்றால், அது நடக்காது. ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். இங்கு ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர், புட்டப் கேஸ் செட்டப் கேஸ் அதெல்லாம் போட வேண்டும் என தீவிரமாக இருக்கிறார்கள், அது தமிழ்நாட்டில் நடக்காது.

ஆளுநர் மாளிகை அருகே வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தமிழக போலீசார் முறையாக விசாரித்தால் உண்மையைச் சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில், சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் எனத் தோன்றுகிறது”  என்றார்.

அதனைத் தொடர்ந்து சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்து வருவது குறித்த கேள்விக்கு, “அரைகுறை படிப்பு ஆல்வேஸ் டேஞ்சர், அதுதான் ஐயா ஆளுநர்” என தெரிவித்தார்.