சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலாவை கொடநாடு வழக்கில் விசாரிக்க அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் பாதுகாவலர் ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டு அங்குள்ள ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக வழக்குப் பதியப்பட்டது.   நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தற்போது வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீஷன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.  அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சுனில் ஆகியோர் விசாரிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது.

நீலகிரி நீதிமன்றம் எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்து மற்றவர்களை விசாரிக்கத் தேவை இல்லை என உத்தரவிட்டது.   நீலகிரி நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு,ல் சதீஷன், சந்தோஷ் சாமி ஆகியோர் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் இவ்வழக்கில் முன்னாள் முதல்வர் தொடர்பு குறித்து சயான் பேசியதை நீலகிரி நீதிமன்றம் தவறி விட்டதாகக் கூறப்பட்டது.

தவிர ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் நடந்த கொள்ளையில், கோடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத்தான் தெரியும் எனவும், புலன் விசாரணைக் குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும், முக்கியக் குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.