பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக  போலி நிருபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிருபர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மற்றொரு போலி நிருபர் மீது புகார் கிளம்பியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பட்டகாரன்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். ஆட்டோ ஓட்டுனராக இருந்த இவர் கடந்த சில மாதங்களாக, தான் ஒரு நிருபர் என கூறி அந்த பகுதி பொதுமக்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பெண்களிடம் ஆபாசமாக பேசும் இவர் தனது செல்போனில் அவர்களை படம் பிடித்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெண்கள் சிலர், சண்முகசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.