சென்னை

திமுக அமைப்புச் செயலர் ஆர் எஸ் பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சவுக்கு சங்கருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சவுக்கு சங்கருக்கு அனுமதி வழங்க, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மறுத்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராகத் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நிருபர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, நீதிபதிக்கு எதிராக விமர்சனம் செய்ததாகக் கூறி, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி, தலைமை வழக்கறிஞருக்கு சவுக்கு சங்கர் மனு அளித்தார்.

தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுத்துள்ளதாகவும், ஆர்.எஸ்.பாரதியின் கருத்துகள் நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இல்லை எனவும், அது நீதிமன்ற அவமதிப்பு செயல் அல்ல என்றும் கூறி, சவுக்கு சங்கரின் மனுவைத் தலைமை வழக்கறிஞர் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.