கோவை

க்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் மீண்டும் கோவையில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

கோவையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் கமலஹாசன் தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது.

இந்தக் கூட்டத்தில் கமலஹாசன்,

”மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் இருந்து போட்டியிடுகிறேன். கோவையில் எனக்கு பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் இங்கு போட்டியிட உள்ளேன். கட்சி நிர்வாகிகள் தேர்தலுக்குத் தயாராக இருக்க வேண்டும். விக்ரம் படத்திற்கு கூட்டம் சேர்கிறது; மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் சேராதா?.

தேர்தலில் கோவைக்கு வாருங்கள் எனத் தொண்டர்கள் அழைக்கிறார்கள். கோவைக்கு வாங்க என கூப்பிடுவது மட்டும் போதாது. வேலை செய்ய 40,000 பேரைத் தயார் செய்ய வேண்டும். எனக்கு மூக்கு உடைத்தால் பரவாயில்லை. மருந்து போட்டு வந்து, மீண்டும் கோவையில் நிற்கிறேன்.

சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக இவ்வளவு பெரிய பிரச்சினையை உருவாக்குகிறார்கள். எங்களுக்கு அந்த வார்த்தையைச் சொன்னவர் பெரியார். திமுகவோ, வேறு எந்த கட்சியோ பெரியாரைச் சொந்தம் கொண்டாட முடியாது, பெரியாரைத் தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும்.

இந்தி ஒழிக எனக் கூறவில்லை, தமிழ் வாழ்க எனக் கூறுகிறோம். இந்தி பேசினால் தான் வேலை என்றால் அந்த வேலை எங்களுக்கு வேண்டாம். அன்பு ஒன்றுதான் எனக்குத் தெரிந்த மதம்”

என்று பேசி உள்ளார்.