கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே பயிர்கள் பாழானதால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட  நிகழ்வு பலர் மனதை உருக்கி உள்ளது.

 

கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம் என்னும் சிற்றூரில் நாராயணசாமி என்னும் விவசாயி தனது மகள் வீட்டில் மனைவியுடன்  வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தில் உள்ள மில் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.  சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம், உளுந்து ஆகிய பயிர்களைப் பயிரிட்டுள்ளார்.  அந்த பயிர்கள் பூச்சி அரித்து பாழானது.

 

அதில் இருந்தே மனம் உடைந்து காணப்பட்ட நாராயணசாமி நேற்று காலை தனது நிலத்துக்குச் சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.  அவரது உறவினர்கள் அவரை தேடிச் சென்ற  போது அங்கிருந்த ஒரு மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாகக் கிடைத்துள்ளார்.  அவரை மருத்துவமனைக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.  அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவருக்குத் தனது பேத்தியான மித்ரா மீது மிகவும் பாசம் இருந்துள்ளது.  எனவே அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு  “மன்னித்து விடு மித்ரா” என எழுதி வைத்துள்ளார்.  இந்த எழுத்துக்களைக் கண்ட உறவினர்கள் மிகவும் உருக்கம் அடைந்துள்ளனர்.  இதைக் கண்டவர்கள் கண்ணில் நீர் சொரிந்துள்ளனர்.