சென்னை:

 தமிழகத்தில் மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் வரை தர்மயுத்தம் தொடரும்  என்று தமிழக தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்சினை காரணமாக ஓபிஎஸ்ஐ மிரட்டி, அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த வைத்தனர் சசிகலா தரப்பினர். அதைத்தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக களமிறங்கினார் ஓபிஎஸ்.

இதன் காரணமாக தமிழக அரசியலில் குழப்பம் நீடித்து வந்தது. அதிமுக சட்டமன்ற குழு உறுப்பினராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்வானார். அதைத்தொடர்ந்து, அவர் கவர்னரை சந்தித்து முதல்வராக பதவி ஏற்க அழைக்கும்படி வற்புறுத்தினார்.

இதன் காரணமாக இன்று காலை எடப்பாடியை அழைத்த கவர்னர், அவரை ஆட்சி அமைக்க  அழைப்பு விடுத்தார். மேலும்மே லும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து  இன்று மாலை முதல்வராக பதவியேற்க இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவருடன் புதிய அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.

இந்நிலையில்,  தற்போது முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

 “ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும், ஆட்சியும் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. அதை தடுத்து நிறுத்துவோம். ஜெயலலிதாவின் கனவான மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் வரையில் தர்ம யுத்தம் தொடரும்” என்றார்.