சென்னை; தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு நிலவுவதாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டி உள்ளார். மருந்து, மாத்திரை தட்டுப்பாட்டால் ஏழை மக்கள் அவதிப்படுவதாகவும்,  உடனடியாக மருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் பதிவிட்டுள்ள டிவிட்டில்  “அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு மருத்துவக் கழகம், சில மாதங்களாக போதிய மருந்துகளை விநியோகம் செய்வதில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசு மருத்துவமனைகள் உள்ளூரிலேயே மருந்து கொள்முதல் செய்யுமாறு உத்தரவிட்டதாகவும், நிதி நெருக்கடியால் போதிய மருந்து வாங்க முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், உயிர்காக்கும் மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, வைட்டமின் மாத்திரைகள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.

அரசு மருத்துவர்கள் சிலர், கடைகளில் மாத்திரை வாங்கிக் கொள்ளுமாறு நோயாளிகளிடம் தெரிவிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக போதிய அளவு மருந்து கொள்முதல் செய்து, மருத்துவமனைகளுக்கு விநியோகிக்குமாறு தமிழக அரசை மநீம வலியுறுத்துகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.