எல்லையில் நடந்த தாக்குதலின் போது பிடிப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை இன்று பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைக்க உள்ளதால், அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்கள் வாகா எல்லையில் திரண்டனர்.
கடந்த 14ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை துல்லியத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து இரு நாட்டு எல்லைப்பகுதியில் நடந்த தாக்குதலின் போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் வீரர்கள் சிறைப்பிடித்தனர். அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை மீட்கும் நடவடிக்கையில் இந்தியா தீவிரமாக இறங்கியது.
ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, போர்க் கைதியாக பிடிக்கப்பட்டுள்ள அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. அதுமட்டுமின்றி, அபிநந்தனை மீட்க ராஜாங்க ரீதியான நடவடிக்கையும் இந்தியா முன்னெடுத்தது.
அதன்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகளை நேரில் அழைத்து பேசிய இந்திய அதிகாரிகள் அபிநந்தனை பாதுகாப்பாக விடுவிக்கும்படி வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து நேற்று பாராளுமன்றத்தில் பேசிய இம்ரான்கான், அமைதியை விரும்பும் நல்லெண்ணா அடிப்படையில் இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என அறிவித்தார். இதனை தொடர்ந்து அபிநந்தனை விடுவிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டது.
இதையடுத்து அபிநந்தன் ராவல்பிண்டியில் இருந்து விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து இன்று பிற்பகல் வாகா எல்லையில் அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
அவரை வரவேற்பதற்காக ராணுவ அதிகாரிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் வாகா எல்லையில் காத்திருக்கிருக்கின்றனர். அபிநந்தனின் பெற்றோரும் அவரின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தாயகம் திரும்பும் அபிநந்தனை வரவேற்பதாகாக ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதல் வாகா எல்லையில் குவியத் தொடங்கினர். அவரை வரவேற்று சமூக வலைதளங்களில் கருத்துக்களும் பகிரப்பட்டு வருகிறது.