சென்னை:
பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம், ரூ.120 கோடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று நாள்களாக கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன.

கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான `இயேசு அழைக்கிறார்’ அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 28 இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த மூன்று நாள்களாகச் சோதனை மேற்கொண்டனர். வரி ஏய்ப்பு, வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை மற்றும் முதலீடு போன்ற புகார்களை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது.

ஜனவரி 20-ம் தேதி தொடங்கிய சோதனை இன்று காலை முடிவுக்கு வந்தது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை தொடர்பாகப் பால் தினகரன் அடுத்த வராம் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பால் தினகரன் கனடாவில் குடும்பத்துடன் இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ச்சியாக நடந்த வருமான வரித்துறையினர் சோதனையில், காருண்யா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் ஐந்து கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாது, சுமார் ரூ.120 கோடி மதிப்பிலான முதலீடுகள் கணக்கில் கட்டப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.