நெல்லை: திருநெல்வேலியில் இருந்து வருகிற 30ந்தேதி முதல் செங்கோட்டைக்கும், திருச்செந்தூருக்கும்  மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட பல ரயில் சேவைகள் இன்னும் முழுமையாக இயக்கப்படவில்லை. அதுபோல செங்கோட்டை, திருச்செந்தூர் பயணிகள் ரயிலும் இயக்கப்படாமல் இருந்து வந்தது. இதுகுறித்து பயணிகள், எம்எல்ஏக்கள்,எம்.பி.க்கள் ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, மதுரை கோட்டத்தில் இருந்து மீண்டும் பயணிகள் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  நெல்லையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு மீண்டும் பயணிகள் ரெயில் வருகிற 30ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. ஏற்கனவே நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு 7.15 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டுச் சென்று மீண்டும் மாலை திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு இரவு 7.40 மணிக்கு வந்தடையும்.

இதேபோல் செங்கோட்டைக்கு தினமும் காலை 7 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரெயில் மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு நெல்லை வந்தடைந்தது. தற்போது அந்த 2வழித்தடத்திலும் கூடுதலாக ரெயில் இயக்கப்படுகிறது.

திருச்செந்தூரில் இருந்து ஒரு ரெயில் நெல்லைக்கு வருகிற 30ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (06674) திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் நெல்லையில் இருந்து (06677) மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருச்செந்தூர் ரெயில் நிலையம் வந்தடைகிறது.

இந்த ரெயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சனாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில்10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

நெல்லையில் இருந்து வருகிற 30ந் தேதி முதல் செங்கோட்டைக்கு மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (06657) நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து வருகிற 31ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (06682) செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு காலை 8.50 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.