விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம் “பரியேறும் பெருமாள்”. இந்த படத்தில் கதிர் – ஆனந்தி ஜோடியாக நடித்திருந்தனர்.

தமிழில் உருவாகும் திரில்லர் படத்தில் இந்த காதல் ஜோடி மீண்டும் இணைகிறது. ஆனால் இந்த படத்தில் அவர்கள் காதலர்கள் இல்லை.

சில மலையாளப் படங்களில் பணியாற்றிய ஜாக் ஹாரிஸ் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கும் ‘மல்டி ஸ்டார்’ திரில்லரான இந்த படத்தில் நரேன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் தவிர வேறு இரண்டு முக்கிய வேடங்களில் நடிக்க பிரபல நடிகைகளிடம் பேச்சு நடக்கிறது.

“சமூகத்தில் நம் கண் முன்பு நடக்கும் நிஜ சம்பவங்களை கருவாக கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ள இயக்குநர் ஜாக் ஹாரிஸ், பெரும்பாலான காட்சிகளை சென்னையில் படமாக்க திட்டமிட்டுள்ளார். மார்ச் மாதம் இதன் ஷுட்டிங் தொடங்குகிறது.

– பா. பாரதி