சென்னை:

மிழகத்தை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தனுக்கு  ‘பரம்வீர் சக்ரா’ விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படையை சேர்ந்த தமிழக வீரரான விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் போர் விமானத்தை வீழ்த்தியபோது,எதிர் பாராதவிதமாக, தனது விமானமும் பாதிக்கப்பட்ட நிலையில், பாராசூட்டில் இருந்து குதித்தவர்,  பாகிஸ்தானிடம் சிக்கினார்.

இது தொடர்பான வீடியோக்கள் வைரலானது. அதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் உலக நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக,  75 மணி நேரத்தில் பாகிஸ்தான் அபியை இந்தியாவிடம் ஒப்படைத்தது.

அபிநந்தனின் வீரத்தை மெச்சும் வகையில், பிறந்த குழந்தைகளுக்கு அபிநந்தன் பெயர்களும், அபியின் மீசையை போன்று இளைஞர்களும் மீசை வைத்து அவரது புகழை பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், அபிநந்தனின் வீரத்தை பாராட்டும் விதமாக,  அவருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.