சென்னை: நடனக்கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான  கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரும் கலைஞர்களில் ஒருவரான  பத்ம விபூஷண் விருது பெற்ற ஈடு இணையற்ற நடனக் கலைஞரான  கதக் ஜாம்பவான் பண்டிட் பிர்ஜு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு காலமானார். இவருக்கு வயது 83. இவர் திரைத்துறையிலும் பங்களிப்பை மேற்கொண்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தான் நடித்த விஸ்வரூபம் படத்தில் கதக் நடனத்தை ஆட,  பிர்ஜு மகாராஜ்ஜிடம் நடனம் பயின்றார். அந்த படத்தில் வரும் ‘உன்னை காணாது’ பாடலுக்கு சிறந்த நடன அமைப்பாளருக்கான தேசிய விருதை பிர்ஜு மகாராஜ் பெற்றார். அதேபோல் பாஜிராவ் மஸ்தானி திரைப்படத்திற்காகவும் தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், ஈடுஇணையற்ற நடனக் கலைஞரான பட்டிட் பிர்ஜு மகாராஷ் மறைந்தார்.  ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’

பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் தெரிவித்து டிவிட் போட்டுள்ளார். அதில்,  “இந்திய நடனக் கலைக்கு உலகளவில் அங்கீகாரம் வழங்கிய பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவு கலை உலகிற்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.