பந்தநல்லூர் பசுபதீசுவரர் திருக்கோயில்
பசுபதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் பசுபதீஸ்வரர், தாயார் காம்பணையதோளி. இத்தலத்தின் தலவிருட்சமாகச் சரக்கொன்றை மரமும், தீர்த்தமாகச் சூரிய தீர்த்தமும் அமைந்துள்ளன.
இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் பந்தநல்லூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது பழங்காலத்தில் பந்தணைநல்லூர் என்று அழைக்கப்பெற்று வந்தது. மேலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 35வது சிவதலமாகும்.
தல வரலாறு
கயிலையில் சிவபெருமானிடம் பார்வதி தான் பந்து விளையாட வேண்டும் என்ற ஆசையைத் தெரிவிக்கிறார். அதனால் சிவபெருமான் நான்கு வேதங்களையும் நான்கு பந்துகளாக மாற்றித் தருகிறார். இறைவி பந்து விளையாட ஏதுவாக சூரியன் மாலை நேரம் வந்தும் மறையாமல் இருக்கிறார். இதனால் சந்தியாவந்தனம் செய்ய இயலாமல் முனிவர்கள் வாடுகிறார்கள்.
சூரியனிடம் முறையிட்டு, அவர் ஆலோசனைப் படி சிவனிடம் விண்ணப்பம் செய்கிறார்கள். பார்வதியிடம் எடுத்துரைக்க வரும் சிவபெருமானை விளையாட்டின் ஆர்வ மிகுதியால் பார்வதி கவனிக்கத் தவறுகிறார். இதனால் பசுவாகப் பூமியில் பிறக்கும் படி சிவபெருமான் பார்வதியைச் சபித்து விடுகிறார். சாப விமோசனம் பெறச் சரக்கொன்றை மரத்தின் கீழ் இருக்கும் சிவலிங்கத்தில் பால் சொறிந்து வரும்படி கூறுகிறார்.
தங்கை பார்வதியைச் சாபத்திலிருந்து காக்கத் திருமால் இடையனாகச் சென்று கன்வ மகரிஷி ஆசிரமத்தில் தங்குகிறார். பசுவானது புற்றில் பால் சொறிவதைக் கண்ட இடையனாக இருந்த திருமால், பசுவினை அடிக்க அது துள்ளிக் குதித்து புற்றினை உடைத்து அதிலிருந்த லிங்கத்தினை வெளிப்படுத்துகிறது. பின்னர் இருவரும் தெய்வ உருவிற்கு மாறுகிறார்கள்.
தல பெருமை
இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காப்போச மன்னன் மகன் குருடு நீங்கிய தலம். அதற்கான ஆதாரமாக இத்தலத்தில் கல்வெட்டுகள் உள்ளன.