சென்னை: ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் பதவி ஏற்று பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்களின் மாத ஊதியம் வெகு குறைவாக இருந்தது. இதை உயர்த்தி வழங்கும்போடி கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக பட்ஜெட் கூட்டத்தொடரின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன்/  ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்படும், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உறுதி செய்யும் பொருட்டு நீரின் தரத்தை பரிசோதிப்பதற்காக சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சி அளித்தல், ஊரக நிர்வாகத்தில் உள்ள கணக்குகள் பதிவேடுகள் மற்றும் படிவங்கள் எளிமைப்படுத்தபட்டு முறைப்படுத்தப்படும் என பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில், தற்போது,  ஊராட்சித் தலைவர்களுக்கான மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், , “கிராம ஊராட்சிகளில் கிராம ஊராட்சி தலைவர்கள் அவ்வூராட்சியின் நிர்வாக அலுவலர் என்கிற முறையில் கிராம ஊராட்சியில் நடைபெறும் மாநில அரசு திட்டங்கள் மற்றும் மத்திய அரசு திட்டங்கள் ஆகியவற்றை முழுமையாக செயல்படுத்திடும் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

ஊராட்சிகளால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பணிகளான குடிநீர் வழங்குதல்,தெரு விளக்குகள் அமைத்து பராமரித்தல், சாலை வசதிகள் ஏற்படுத்துதல், சுகாதாரத்தினை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ன் பிரிவு 82ல் மேற்கொள்ளப்பட்ட ஊராட்சிகள் திருத்த சட்டம் 2012ன் படி கிராம ஊராட்சி தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியத்தை காலத்திற்கேற்ப அரசு நிர்ணயிக்கும் விகிதத்தில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.”

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.