சென்னை: நியாய விலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை மற்றும் துணிநூல் துறையை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

நியாய விலைக் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டம், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியப் பொருட்களைக் கொள்முதல் செய்திட புதிய கைப்பேசி செயலி ஆகிய திட்டங்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தொடர் முயற்சியால் கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவகம் மூலம் பெறப்பட்ட புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்களை வெளியிட்டார்.

பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு “கற்பகம்” என்ற பெயரில் நியாய விலை கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பல்பொருள் அங்காடிகளில் கரும்பனை என்னும் பெயரில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் குறிஞ்சி சந்தனம், வேம்பு, இயற்கை மூலிகை, குமரி கற்றாழை போன்ற குளியல் சோப்பு வகைகள் மக்களைக் கவரும் வண்ணம் உற்பத்தி செய்யப்பட்டு சிறந்த முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நவீன காலத்திற்கேற்றவாறு சந்தையில் உள்ள இதர சோப்புகளுக்கு இணையாக ரோஸ், லேவண்டர், சந்தனம் மற்றும் செஞ்சந்தனம் எனும் 4 வகையான நறுமணங்களில் 125 கிராம் அளவுகளில் மக்கள் விரும்பும் வண்ணம் நவீன வடிவமைப்பிலான அட்டைப் பெட்டிகளில், வாரிய கதரங்காடிகள் மற்றும் சந்தையில் பிரசித்தி பெற்ற பல்பொருள் அங்காடிகளின் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் பச்சைத் தேன், நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தேனீ விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, பதப்படுத்தி அக்மார்க் தரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கதர் அங்காடிகளில் கடந்த பல ஆண்டுகளாக பெட் பாட்டில்களில் தேனை அடைத்துப் பல்வேறு அளவுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உணவு மற்றும் பாதுகாப்புத் துறையின் அறிவுரைப்படி, கண்ணாடி பாட்டில்களில் தேனை அடைத்து விற்பனை செய்திடும்போது தேனின் பண்புகள் நீண்ட நாட்களுக்கு மாறாமல் இருக்கப்பெறும் என்பதாலும், சந்தையில் பிரசித்தி பெற்ற பல்பொருள் அங்காடிகளின் மூலம் காதி தேனை விற்பனை செய்யும் நோக்கிலும், நவீன கண்ணாடி பாட்டில்களில் பொதுமக்களைக் கவரும் வண்ணம் அழகிய லேபிள்களைக் கொண்ட 250 கிராம் மற்றும் 500 கிராம் அளவுகளில் தேன் விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ‘கற்பகம்’ என்ற பெயரில் நியாய விலைக் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பல்பொருள் அங்காடிகளில் கரும்பனை எனும் பெயரில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய பொருட்களைக் கொள்முதல் செய்திட புதிய கைப்பேசி செயலி

வணிகக் களத்தில் ஏற்பட்டு வரும் அபரிமிதமான மின்னணுத் தொழில்நுட்ப வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு இளம் தலைமுறையினர் எளிதில் இணையதள சேவையினைப் பயன்படுத்தி தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியப் பொருட்களைக் கொள்முதல் செய்திட ‘tnkhadi’ எனும் ஆண்ட்ராய்டு / iOS இயக்க கைப்பேசி செயலியை முதல்வர் அறிமுகப்படுத்தினார்.

பனை வெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சாயல்குடியில் ‘ராமநாதபுரம் – சிவகங்கை’ மாவட்ட பனை வெல்லக் கூட்டுறவு விற்பனை சம்மேளனத்திற்குச் சொந்தமான இடத்தில், பனைத் தொழிலை மேம்படுத்திடும் நோக்கில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.53.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பனை வெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய பொருள்களை கொள்முதல் செய்ய புதிய கைபேசி செயலி வணிகக் களத்தில் ஏற்பட்டு வரும் அபரிமிதமான மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு இளம் தலைமுறையினர் எளிதில் இணையதள சேவையினை பயன்படுத்தி தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய பொருள்களை கொள்முதல் செய்ய “tnkhadi” எனும் கைபேசி செயலியை தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

பனைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி

பனை வெல்லம் மற்றும் பனைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையம் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சாயல்குடியில் “ராமநாதபுரம் – சிவகங்கை” மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு விற்பனை சம்மேளனத்திற்கு சொந்தமான இடத்தில், பனைத் தொழிலை மேம்படுத்திடும் நோக்கில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.53.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

துணிநூல் துறை

2021-22ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தவாறு, கைத்தறி மற்றும் துணிநூல் துறையினைப் பிரித்து, தனியாக துணிநூல் துறை என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது.இதனை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சிறந்த நெசவாளர்கள் விருது

தற்போதைய சந்தையில் அதிக தேவையுள்ள பட்டு, கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசால் சிறந்த நெசவாளர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் தெரிவு செய்யப்பட்ட 6 கைத்தறி நெசவாளர்களுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் முறையே பட்டு, பருத்தி ஆகிய இரண்டு ரகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சான்றிதழ் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

அந்த வகையில், 2020-21ஆம் ஆண்டிற்கான பட்டு ரகத்திற்கான சிறந்த நெசவாளர் விருதிற்கான முதல் பரிசு கே.ஜி. கண்ணன், இரண்டாம் பரிசு வி. சரவணன், மூன்றாம் பரிசு கே. சுமதி, பருத்தி ரகத்திற்கான சிறந்த நெசவாளர் விருதிற்கான முதல் பரிசு இ.ஆர். நாகம்மாள், இரண்டாம் பரிசு எஸ். ரவி, மூன்றாம் பரிசு என். நெடுஞ்சேரலாதன் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று பரிசுத் தொகைக்கான காசோலைகள், சான்றிதழ்களை வழங்கினார்.

சிறந்த ஏற்றுமதியாளர் விருது 

கைத்தறி துணிகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், அயல்நாட்டு சந்தையில் கைத்தறி துணி விற்பனையினை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு சிறந்த கைத்தறி துணி ஏற்றுமதியாளர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை 1975ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த ஏற்றுமதியாளர் விருதிற்கான முதல் பரிசு சென்னை – திருவாளர் அம்பாடி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், இரண்டாம் பரிசு ஈரோடு – சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கும் மற்றும் மூன்றாம் பரிசு ஈரோடு – திருவாளர் ஃபைவ் பி வென்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சரிகை ஆலை, பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவைப்படும் சரிகையினை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1974-ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியிலான உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது.

இந்நிறுவனம் ISO:9001:2015 தரச்சான்று பெற்ற, மாநில அரசு சார்ந்த ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவைப்படும் 60 சதவீத சரிகையினை உற்பத்தி செய்து நியாயமான விலையில் விநியோகம் செய்து வருகின்றது.

காஞ்சிபுரம் – தமிழ்நாடு சரிகை ஆலை நிறுவனத்தின் 2019-2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ஈவுத் தொகையான 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஊரக தொழிற் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, கைத்தறி மற்றும் துணி நூல் ஆணையர் மருத்துவர் பீலா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி வி.ஷோபனா, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் திரு. த.பொ. ராஜேஷ், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் முனைவர் பொ. சங்கர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.