பழனி:
தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டுசெல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் கடந்த 7ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்தது. தைப்பூசத் திருவிழாவின் போது அருள்மிகு முத்துக்குமாரசாமி – வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கப்பட்டது.

இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள குறவர் இனமக்கள் அனைவரும் இணைந்து பழனி முருகனுக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு சென்றனர். இதில் தேன், திணைமாவு, மா,பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு, ஆகியவை சீர்வரிசையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முருகனுக்கும் வள்ளிக்கும் சீதனமாக வழங்கப்பட்டது.

சீர்வரிசை பொருட்களை பழனி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து முருகனை வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் குறவர் இனத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.