டில்லி

காங்கிரஸ் அரசின் தோள் மீது நிற்பதுதான் பாஜக அரசு ஒரு சில துறைகளில் முன்னணியில் உள்ளதற்கு காரணம் என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஒரு ஆங்கில பத்திரிகை கட்டுரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பங்களிப்பு குறைவாக உள்ளது.  எதிர்க்கட்சிகள் விவாதம் செய்யாமல் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதிலேயே கவனமாக உள்ளன.  ஆயினும் எதிர்க்கட்சிகளுக்கு 15க்கும் மேற்பட்ட வாக்குகளில் தோல்வியே கிடைத்துள்ளது” எனக் கூறி இருந்தார்.

இதற்கு முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது டிவிட்டரில்

”மத்திய நிதி அமைச்சர் மோடி அரசின் சாதனைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அவர் சுட்டிக்காட்டிய பல சம்பவங்கள் உண்மைதான். 5 அல்லது 10 ஆண்டுகள் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் அதை செய்திருக்கும் என்பதுதான் உண்மை.

மோடி அரசை எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்துக்கு இழுத்து, தோல்வி அடைந்ததாக 5 வழக்குகளை நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டி இருக்கிறார். அவற்றில் 3 வழக்குகளைப் பற்றி அவர் சொன்னது தவறு.

உதாரணமாக, ‘முத்தலாக்’ தடைக்காக நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதற்கு முன்பே, முத்தலாக் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பான 370-வது பிரிவு பற்றிய வழக்கு, இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஜி.எஸ்.டி. தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

பால், தேன், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். அந்த முன்னணி இடம், பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்றது. அதை தொடர்ந்து தக்க வைத்துள்ளோம்.

வங்கிக்கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்துவதையும் சாதனை பட்டியலில் நிதி அமைச்சர் சேர்த்துள்ளார். ஆதார் திட்டத்தைக் கருவாக்கி, உருவாக்கி, அமல்படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்பதை அவர் மறந்து விட்டார். முதல்முறையாக வங்கிக்கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தியதும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான்.

11 கோடியே 72 லட்சம் கழிப்பறைகள் கட்டியதாக நிதி அமைச்சர் பெருமை பேசுகிறார். அவற்றில் எத்தனை கழிப்பறைகள் தண்ணீர் இல்லாமல் பயன்படுத்தாமலும், பயன்படுத்த முடியாமலும் இருக்கின்றன என்பது பற்றிய தனது அரசின் அறிக்கைகளை அவர் படிக்க வேண்டும்.

எல்லா அரசும் தனக்கென சாதனை பட்டியல் வைத்திருப்பது போலவே மோடி அரசும் வைத்திருக்கிறது. சில துறைகளில் மோடி அரசு முன்னணியில் இருக்கிறது என்றால், அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோள்களில் நிற்பதே காரணம்” 

என்று கூறியுள்ளார்.