சென்னை:
ருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி ஆர்கேசுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், அந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திரும்பச் செலுத்தவில்லை.

இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி, ராஜா உள்ளிட்ட 11 பேர் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் பாஜகவின் ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவராக இருந்து வரும் ஆர்.கே. சுரேஷ், ஆருத்ரா மோசடி வழக்கில் தனக்குத் தெரிந்தவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களுக்கு உதவியும் வந்ததாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே. சுரேஷ் வங்கிக் கணக்கிற்குப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆர்.கே. சுரேஷ் ஆஜர் ஆகவில்லை.

அதே சமயத்தில் ஆர்.கே. சுரேஷ் தரப்பில், சம்மனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து மோசடி புகாரில் தலைமறைவாக இருந்து வரும் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஆர்.கே. சுரேஷ் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில் ரூ.15 கோடி வாங்கியுள்ளதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவ்விவகாரத்தில் 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 500 முகவர்கள் மூலம் ரூ.800 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளதாகக் குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.