சென்னை:
2023 ம் ஆண்டு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பதக்கம் பெறவுள்ள காவலர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் அவர்கள் 09.05.2022 அன்று சட்டப்பேரவையில் உள். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது “சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள் காவலர்களை ஊக்குவிப்பதற்கென மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துறைக்கேற்ப காவல் அதிகாரிகள் / ஆளிநர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படுகிறது.

முதலமைச்சர் பதக்க விருது அறிவிப்பு

அதன் படி,
1. திரு.வெ.பத்ரிநாராயணன், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர். கோவை மாவட்டம்.,

2. திரு.டோங்கரே பிரவின் உமேஷ், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம்

3. திரு.மா.குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர், இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம்.

4.. திரு.சு.முருகன், காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம்

5.. திரு.இரா.குமார். முதல் நிலை காவலர்-1380. நாமக்கல் மாவட்டம்

மேலும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் திரு அஸ்ரா கர்க், இ.கா.ப., காவல்துறைத் தலைவர், தென் மண்டலம், மதுரை, அவர்களின் சீரிய பணியை அங்கீகரித்து அவர்களுக்கு ரொக்கப் பரிசு இல்லாமல், இந்த “சிறப்பு பதக்கம்” தனி தேர்வாக வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த முதலமைச்சர் பதக்கம் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.