ஈரோடு:  நமது நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சார களத்தில், தனது விஸ்வரூபம் திரைப்படத்துக்கு எழுந்த பிரச்சினையை முன்வைத்து, ஜெயலலிதா – கருணாநிதி என இருபெரும் அரசியல் ஆளுமைகளுக்கு இடையிலான தனது அனுபவத்தையும் பகிர்ந்தவர், நமது நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. 77பேர் களத்தில் இருந்தாலும், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி, திமுக அமைச்சர்கள் குழுவிகே அங்கு முகாமிட்டு பணியாற்றி வருகிறது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எடப்பாடி தரப்பினரும், பாஜகவினரும் வாக்கு வேட்டையாடி வருகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,  பொதுமக்களிடம் பேசும்போது, ’ஒரு சின்னத்தில் நின்றுவிட்டு தற்போது வேறு சின்னத்திற்காக ஓட்டுக் கேட்டு வந்துள்ளேன் என நீங்கள் நினைக்கலாம். நாட்டில் சர்வதிகார போக்கு தலை தூக்குகிறது. அதனால் யாருடன் கை கோர்க்க வேண்டும் என எனக்கு நன்கு தெரியும். அதனால் தான் இங்கு பிரச்சாரத்திற்கு வந்துள்ளேன்.

ஈவிகேஎஸ் இளங்கோவனும் நானும் உறவினர்கள் தான். விஸ்வரூபம் படத்தின் போது என்னை தடுமாற வைத்து ஒரு அம்மையார் சிரித்தார். அப்போது என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கலைஞர் கருணாநிதி ’பயப்படாதே’ என்றார். ’உதவி வேண்டுமா’ எனக் கேட்டார். ’இது நாட்டு பிரச்சனை யல்ல என் பிரச்சனை. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என கூறினேன்.

இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலினும் போன் செய்து கேட்டார். விட்டு விடுங்கள் இது என் பிரச்னை என்றேன். அப்போது அல்லவா நான் அவர்களிடம் கூட்டணி வைத்திருக்க வேண்டும். ஆனால், நான் சுயநலத்திற்காக கூட்டணி வைக்கவில்லை. என்னுடைய கடனையெல்லாம் தீர்த்து தற்போது எந்த லாபமும் எதிர்பார்க்காமல் வந்துள்ளேன்.

இங்கே வந்திருப்பதன் நோக்கம் நமது நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக!  அதற்கான முன்னோடி வேலைகளையெல்லாம் செய்த கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளரான இளங்கோவனுக்கு என் ஆதரவை கொடுப்பது ஒரு இந்தியனாக எனது கடமை. ஒட்டுமொத்த இந்தியாவையும் குத்தகைக்கு விடுவதை நாங்கள் எப்படி வேடிக்கை பார்த்து கொண்டிருப்போம். இப்போது இந்த கூட்டத்துடன் நிற்பது எனக்கு பெருமை. கொள்கைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு, மக்களின் நலன் என்று வரும்போது, எது நியாயமோ, அதை செய்வதுதான் மய்யத்தின் ஆட்சி. பல விமர்சனங்களை கேட்டுவிட்டுத்தான் இது சரியான பாதை என்று தேர்ந்தெடுத்து வந்துள்ளேன் என்றார். அதற்காகத்தான் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு உங்களிடம் வந்துள்ளேன். அவருக்கு வாக்களித்து வெற்றிப் பெற செய்ய வேண்டும்’’

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.