சென்னை: வெளிநாட்டு இறக்குமதி சொகுசு காருக்கு வரி செலுத்துவதில் விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் தனுசுக்கு நீதிபதி சரமாயாக கேள்வி விடுத்துதார்.  சாதாரண பால்காரர், சோப்பு வாங்கும் பொதுமக்கள், பெட்ரோல் போடுபவர்கள் உள்பட அனைத்து  ஏழை நடுத்தர மக்கள் கூட வரி செலுத்தும்போது, சொகுசு காருக்கு நுழைவு வரி கட்ட ஏன் தயங்குகிறீர்கள் என சரிமாரியாக கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே இதுபோல வரி தள்ளுபடி கேட்ட நடிகர் விஜயை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததுடன், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது. இந்த நிலையில், நடிகர் தனுசையும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

2015ஆம் ஆண்டில் நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கினார். அதற்கு வரி கட்ட உத்தரவிட்டதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, வழக்கை  விசாரித்த நீதிமன்றம், 50 சதவீத வரியைச் செலுத்தி காரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்து கொள்ளலாம் என குறிப்பிட்டது. ஆனால், தனுஷ் இதுவரை காரை பதிவு செய்யவில்லை; வரியையும் கட்டவில்லை.

இதற்கிடையில், கேரளாவில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மேல்முறையீடு வழக்கில், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் 2019ல் தீர்ப்பளித்தது.

கேரள உயர்நீதிமன்ற  உத்தரவை மேற்கோள் காட்டி, நடிகர்கள் உள்பட பலர்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் நுழைவு வரி வசூலிக்கக்கூடாது என உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

அதில், நடிகர் விஜயைத் தொடர்ந்து, ஒருவர் நடிகர் தனுஷும் வழக்கு தொடர்ந்தார்.   கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரியிருந்தார். அவரது மனுவில், தனது இறக்குமதி காருக்கு, 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டுள்ளது. அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கில் 50 சதவிகித வரித்தொகை செலுத்தி,  விதிகளைப் பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார். ஆனால், தனுஷ் தரப்பில் இதுவரை வரி கட்டவில்லை.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு  விசாரணைக்கு வந்தது . அப்போது, நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம், மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்து வைக்கும்படி கோரிக்கை வைத்தார். மேலும்,  வழக்கை வாபஸ் பெறுவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாக கூறினார்.

அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறுக்கிட்டு சரமரியாக கேள்வி எழுப்பினார்.

பலகோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறார் என குறிப்பிடாதது ஏன்.

என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார்?

ஒருவரின் பணியையோ அல்லது தொழிலையோ மனுவில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா?

2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, வரியை செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே,

அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன?

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை வரி செலுத்தாத நிலையில் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க முடியாது?

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டியது தானே

உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும்

சாமான்ய மக்களுக்கு ஒரு சட்டம், தனுஷ்க்கு ஒரு சட்டம் என்று இல்லை

ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் அல்லது சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை நடுத்தர மக்கள் கூட வரி செலுத்துகிறார்கள்,

 பெட்ரோலில் ஜி.எஸ்.டி. கட்ட முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா?

என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாகவும் கூறினார்.

மேலும், உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள் என குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள்.

எந்த தனிப்பட்ட ஒருவரையும் குற்றம் சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல என்று விளக்கம் அளித்த நீதிபதி, அரசு விதிகள்படியும் நீதிமன்ற உத்தரவுபடியும் நடக்கும்படி அறிவுறுத்தியதுடன்,  நடிகர் தனுஷ் செலுத்த வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாக கணக்கிட்டு மதியம் 2:15க்கு தெரிவிக்க வேண்டும் எனவும், கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு,  வழக்கை இறுதி தீர்ப்புக்காக மதியம் தள்ளிவைத்துள்ளார்.