சென்னை;  முன்னாள் முதல்வரும், துணை எதிர்க்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், வருமானவரித்துறை நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடுத்த நிலையில், அந்த வழக்கை திடீரென வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர்  சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது  பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பினர். அதில்,  2015-16-ம் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017-18-ம் ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருமான வரித்துறை  நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து வருமான வரித்துறையில் மேல்முறையீடு செய்துள்ளதால் மனுவை திரும்பபெற அனுமதிக்க வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல்குத்தூஸ், மனுவை திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டார்.